அண்ணன் வழியில் அயராது உழைப்போம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம். வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம். இந்தித்திணிப்பை என்றும் எதிர்ப்போம். மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.
Saturday, August 21, 2010
மாநில சுயாட்சி-கேலிக்கூத்தாக்கும் மத்திய அரசு.
மாநில சுயாட்சி கொள்கைக்கு வேட்டு வைக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவுகள். தலைவர் கலைஞர் வேதனை.
மத்திய அரசு கொண்டு வருகின்ற எந்தத் திட்டமானாலும், அது நுழைவுத் தேர்வானாலும் - சரக்கு மற்றும் சேவை வரி முறைகளில் கொண்டு வருகின்ற திருத்தங்கள் ஆனாலும் அவற்றில் எல்லாம் மாநிலங்களுடைய கருத்துக்களைக் கேட்டறிந்து நிதானமாக செயல்படுத்த வேண்டுமென்று தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனை தொடக்க விழா மற்றும் சேலம் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் புதிய அலுவலகம், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக புதிய கட்டிடம், சேலம் அரசு நர்சு பயிற்சி கல்லூரி, தங்கும் விடுதி கட்டிடம், பள்ளிக்கட்டிடங்கள் ஆகியவற்றின் திறப்பு விழாவும் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் 24 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தலைவர் கலைஞர் பேசியதாவது:
சேலத்துக்கு புதிய திட்டங்களை வழங்க வேண்டும் என்பதில் எனக்கு தணியாத ஆவல் உண்டு. நான் வளர்ந்த ஊர்களில் சேலமும் ஒன்றாகும். நான் திருக்குவளையில் பிறந்து இருந்தாலும் அந்த ஊருக்கு ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றி இருக்கிறேன்; ஆற்றிக்கொண்டு வருகிறேன். வளர்ந்த ஊர் திருவாரூராக இருந்தாலும் அந்த ஊருக்கும் ஆற்ற வேண்டிய பணிகளை சாதனைகளை முன்னேற்றங்களை உருவாக்கி இருக்கிறேன்; உருவாக்கிக்கொண்டு இருக்கிறேன்.
அதைபோலவே தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒன்றாக இருக்கும் ஊர் சேலம் பகுதியாகும். அந்த வகையில் இங்கே உரையாற்றியவர்கள் குறிப்பிட்டது போல் நான் சேலம் கோட்டையில் வாழ்ந்தவன். கோட்டையில் வாழ்ந்ததால் கோட்டைக்கு செல்லக்கூடிய வாய்ப்பை பெற்று 5 முறை கோட்டையில் அமரக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.
நான் இங்கே குடியிருந்த போது, இந்த நகரத்தினுடைய மக்களின் குறைகளை தேவைகளை அனுபவரீதியாக உணர்ந்து இருக்கிறேன். இதையெல்லாம் தீர்ப்பதற்கு நம்முடைய அரசு வரவேண்டுமே நம்முடைய நிர்வாகம் வரவேண்டுமே என்று நண்பர்களுடன் பேசி கவலைப்பட்ட காலம் உண்டு. ஆனால், அந்த நிர்வாகம் வந்து இவையெல்லாம் தீர்க்கக்கூடிய வாய்ப்பும் கிடைத்திருப்பதுதான் உள்ளபடியே நான் அடைந்த மகிழ்ச்சிக்கெல்லாம் உச்சக்கட்ட மகிழ்ச்சியாகும் என்று சொன்னால் அது மிகையாகாது
சேலத்தை பொறுத்தவரை இங்கே நம்முடைய சேலத்துக்கு சேலம் மாவட்டத்துக்கு எந்தெந்த திட்டங்களை கேட்கிறாரோ அவற்றை வாதாடி போராடி கேட்கிற திறமை வாய்ந்தவராக வீரபாண்டியார் திகழ்கிறார் என்று இங்கு பேசிய பேராசிரியர் குறிப்பிட்டார்.
இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் கட்டும் திட்டம் திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியிலே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
மாவட்டம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பது மிக, மிக முக்கியம் என்பதை திராவிட முன்னேற்ற கழக ஆட்சி உணர்ந்த காரணத்தினால் ஏறத்தாழ 10 அல்லது 12 மாவட்டங்களில் அந்த அலுவலக கட்டிடங்களை நாம் பிரமாண்டமான முறையில் அமைத்து உள்ளோம். அவற்றிலே ஒன்று தான் இன்று சேலத்திலே திறந்து வைக்கப்பட்டு உள்ள இந்த மாபெரும் கட்டிடம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைவதற்கு இந்த அரசு தானாக முன்வந்து இது அமைக்கப்பட்டதா? என்றால் இல்லை. அதைத்தான் இங்கே பேசிய நண்பர்கள் எல்லாம் குறிப்பிட்டார்கள். இவ்வளவு பெரிய கட்டிடம், இத்தனை வசதி வாய்ப்புகள், தமிழகத்தில் வேறுஎங்கும் இல்லாத அளவிற்கு வசதிகள் கொண்டதாக இந்த கட்டிடம் அமைவதற்கு தொடர்ந்து முயற்சிகள் எடுத்துக்கொண்டு கட்டி முடித்தது கழக அரசு என்றாலும், அதிலே உள்ள ஒவ்வொரு கல்லும் வீரபாண்டி ஆறுமுகம் பெயர் சொல்லும் என்கின்ற அளவிற்கு இந்த கட்டிடம் உயர்ந்து நிற்பதற்கு நான் என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.
இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் மட்டுமின்றி நவீன வகையிலே மருத்துவமனை கட்டிடம் ஒன்றும் இங்கே எழுந்து நிற்கிறது. புது டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக சேலம் மாநகரில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி அதி நவீன மருத்துவமனை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு 139 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு இன்றைக்கு உங்களின் அன்பான வாழ்த்துக்களுடனும் பாராட்டுகளுடனும் திறக்கப்பட்டு உள்ளது.
இந்த 139 கோடி ரூபாயில் 100 கோடி ரூபாய் மத்திய அரசு நிதியாக தந்தது என்பதை நான் நன்றியோடு உங்களுக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதை நான் இந்த மேடையிலே சொல்லாவிட்டால், ஏதோ கருணாநிதி தமிழக அரசின் செலவிலே தான் இதைக் கட்டியதாகச் சொல்லிக் கொள்கிறார், இல்லை என்று யாராவது நாளைக்கு மறுப்புச் சொல்லி, மத்திய அரசின் நிதியும் இதிலே இருக்கிறது என்று யாராவது சொல்வார்களேயானால், நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் - மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி - இரண்டுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. இதே கரன்சி தான் அங்கும் - அதே நாணயம் தான் இங்கேயும்.
நாம் செலுத்துகின்ற வரி மத்திய அரசுக்குச் செல்கிறது. அந்த வரியை அவர்கள் பங்கிடும்போது மாநில அரசுக்கு அதிலே ஒரு பங்கு வருகிறது. எனவே இதிலே மத்திய அரசு, மாநில அரசு என்றெல்லாம் பிரிக்கத் தேவையில்லை. இருந்தாலும் சில அதிகாரங்களை - சில அனுமதிகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசியல் சட்டப்படி - அரசியல் சட்டம் வகுத்திருக்கின்ற நெறிமுறைகளின்படி - இன்றளவில் அதிலே உள்ள நிலைகளின்படி - மத்திய அரசின் கையிலே தான் இருக்கின்ற காரணத்தால் மத்திய அரசினுடைய அனுமதியையும் பெற்று - அவர்களிடம் நிதியையும் கேட்டுப் பெற்று - 139 கோடி ரூபாய்ச் செலவிலே 100 கோடி ரூபாய் மத்திய அரசு பொறுப்பேற்று - இந்த அழகான சூப்பர் ஸ்பெஷாலிட்டி, அதி நவீன சிறப்பு மருத்துவ மனையை நாம் உருவாக்கியிருக்கிறோம். அதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ஒன்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். என்ன தான் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டிலே நாம் உருவாக்கினாலுங்கூட, ஒரு வார காலமாக அல்லது சில நாட்களாக - வருகின்ற செய்திகள் நம்மை மிகவும் பாதிக்கத் தக்கவைகளாக வருந்தத் தக்கவைகளாக - கவலைக் கொள்ளச் செய்யத் தக்கதாக உள்ளது.
நான் பத்திரிகைகளிலே ஒரு செய்தி பார்த்தேன். இனிமேல் மருத்துவக் கல்லூரிகள் எல்லாம் மத்திய அரசின் பொறுப்பிலே - மாநில அரசுகளின் பொறுப்புக்களிலே மாத்திரமல்லாமல் - வரும் என்றும் - அப்படி வருகின்ற காரணத்தால், இனி நுழைவுத் தேர்வும் உண்டு என்றதொரு செய்தி வந்தது.
நுழைவு தேர்வை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நாம் சட்டமியற்றி ரத்து செய்து விட்டோம். நுழைவுத் தேர்வு வந்தால் கிராமப்புற மாணவர்கள் முன்னேற முடியாது. அவர்கள் உயர்ந்த பதவிகளுக்கு வர இயலாது. இடையிலே தடுக்கப்பட்டு விடுவார்கள் என்பதற்காகத் தான் மக்கள் நல்வாழ்வுத் துறையிலே பயிலுகின்ற - இருக்கின்ற மாணவர்களுக்கு வழி அடைபட்டு விடக் கூடாது என்பதற்காக நுழைவுத் தேர்வு என்கின்ற ஒரு வாசல் வேண்டாம், அவர்கள் நேரடி யாகவே நுழைவுத் தேர்வு இல்லாமலே வளரட்டும் என்று ஒரு திட்டத்தை அறிவித்து, அதைச் சட்டமாகவே ஆக்கினோம். அதிலே தமிழகத்திலே இருக்கின்ற எந்தக் கட்சிக்கும் வேறுபாடான கருத்து கிடையாது.
நான் பட்டவர்த்தனமாகச் சொல்கிறேன், வெளிப்படையாகச் சொல்கிறேன். காங்கிரஸ் கட்சி இதிலே நம்மிடம் வேறுபடாத கட்சி. பா.ம.க. நாம் சொல்லுகின்ற இதே கருத்தை உடைய கட்சி. இன்னும் சொல்லப் போனால் எதிர்க்கட்சியாக இருக்கின்ற அ.தி.மு.க. கூட நுழைவுத் தேர்வு கூடாது, தேவையில்லை என்ற நம்முடைய வாதத்தை ஏற்றுக் கொண்ட இயக்கம் தான், நான் நேற்றைக்குக் கூட பத்திரிகைகளிலே பார்த்தேன். அ.தி.மு.க. தலைவி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இனிமேல் மத்தியிலே நுழைவுத் தேர்வை கொண்டு வரப் போகிறார்கள். நம்முடைய முதல் அமைச்சர் என்ன செய்யப் போகிறார்? இவருக்கு தெரிந்தது எல்லாம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது தான் என்று எதிர்க் கட்சித் தலைவி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
எனக்கு கடிதம் தான் எழுதத் தெரியும், வேறு அதற்காக வாதாடத் தெரியாது, அவருக்குத் தைரியம் இல்லை என்று அறிக்கை விட்டு, அதைப் பின்பற்றி சில பத்திரிகைகள் கூட தமிழ்நாட்டில் எழுதியிருப்பதைப் பார்த்தேன். கடித இலக்கியம், கடிதக் காவியம் என்றெல்லாம் நான் எழுதுகின்ற கடிதங்களை அதே நேரத்தில் டெல்லிக்குத் தெரிவிக்கின்ற தகவல்களைக் கூட கேலி செய்பவர்கள் இருக்கின்றார்கள்.
என்ன கடிதம்? இந்தச் செய்தியைப் பார்த்தவுடன், நாங்கள் கலந்து பேசினோம், செயலாளர்களோடு பேசினோம், அமைச்சர்களோடு பேசினோம், உடனடியாக பிரதமருக்கு - காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா அவர்களுக்கு - இதைச் சொல்லுகின்ற விளக்குகின்ற கடிதங்களை எழுதினோம். என்ன எழுதினேன் என்றால், கிராமப் புறத்திலே இருக்கின்ற சாதாரண, சாமான்ய மக்களுடைய வாழ்வை பாழாக்குகின்ற வகையில் இந்த நுழைவுத் தேர்வு அமைந்து விடும், ஆகவே நுழைவுத் தேர்வை நடத்தக் கூடாது என்று தமிழ்நாட்டு மக்களுடைய மனக் கொதிப்பை நான் வெளியிட்டு, பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அது என்ன? சாதாரணக் கடிதம் என்று அவர்கள் விட்டு விட்டார்களா? இவர் என்ன கடிதம் எழுதுவது, நாம் என்ன அதைக் கவனிப்பது என்று சொல்லி விட்டார்களா, இருந்து விட்டார்களா என்றால் இல்லை. கடிதம் எழுதினால் பலன் இல்லை என்று சொன்னவர்களுக்கு நான் ஒரு தகவலைச் சொல்லுகிறேன்.
நான் கடிதம் எழுதிய காரணத்தால் தான் இன்றைய மாலைப் பத்திரிகைகளிலே "மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு - நிறுத்தி வைப்பு - மத்திய அரசு அறிவிப்பு'' என்று செய்தி வந்திருக்கிறது. மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கூடாது என்பது தமிழகத்திலே உள்ள தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட எல்லா கட்சிகளின் எண்ணம். ஆனால் அதைச் சொல்லுகின்ற ஒரு வாய்ப்பாக இருக்கின்ற ஆளுங் கட்சியான தி.மு.க. அதை எடுத்துச் சொல்லி, அதற்கு மதிப்பளித்து, பிரதமரும், டெல்லியில் உள்ள அமைச்சர்களும், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி அம்மையாரும் கலந்தாலோசித்து - மத்திய அரசின் சுகாதாரத் துறை செயலாளர் செய்தியாளர்களிடம் இன்று கூறும் போது, நுழைவுத் தேர்வு நடத்துவதை ஒத்தி போட்டிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்.
நான் கடிதம் எழுதியதோடு நின்று விடவில்லை. உச்ச நீதி மன்றத்திலே கூட நடைபெற்று வந்த வழக்கில் நேற்றையதினம் நம்மை இணைத்துக் கொண்டிருக்கிறோம். இது எங்களுடைய மாணவர்களுக்கு ஆகாது, தீங்கு, இதை நீங்கள் நிறுத்தி வைக்க வேண்டுமென்று உச்ச நீதி மன்றத்திலும் ஒரு மனுவினை தாக்கல் செய்து, அந்த வழக்கிலும் நாம் நம்மை ஒரு வாதியாக இணைத்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படிப்பட்ட நிலையில் நான் இந்த அறிவிப்பின் மூலம் மகிழ்ச்சி அடைந்தாலுங்கூட - இதற்குப் பிறகும் தொடர்ந்து தமிழகத்திலே இருக்கின்ற மாநில உரிமைகளை மத்திய அரசு எடுத்துக் கொள்ளுகின்ற முறையிலே நடந்து கொள்ளுமேயானால், எங்களுடைய ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
நேற்றைக்குக் கூட டெல்லியில் நிதியமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நம்முடைய அரசின் சார்பாக தம்பி துரைமுருகன் சென்று கலந்து கொண்டார். அவர் மூலமாக நாம் தெரிவித்திருக்கின்ற கருத்து - மாநில அதிகாரங்களை யெல்லாம் பறித்து விடக் கூடாது - ஏற்கனவே பல அதிகாரங்கள் மாநிலங்களிடமிருந்த பறிக்கப்பட்டு - நாம் கோரி வருகின்ற "மாநில சுயாட்சி''யின் முழு உருவம் மூளியாகிக் கொண்டிருக்கின்றது. ஆகவே நீங்கள் கொண்டு வருகின்ற எந்தத் திட்டமானாலும், அது நுழைவுத் தேர்வானாலும் - சரக்கு மற்றும் சேவை வரி முறைகளில் கொண்டு வருகின்ற திருத்தங்கள் ஆனாலும் அவற்றில் எல்லாம் மாநிலங்களுடைய கருத்துக்களைக் கேட்டறிந்து நிதானமாக முடிக்க வேண்டுமென்று தான் தமிழகத்தின் சார்பாக நேற்றைய கூட்டத்திலே சொல்லப்பட்டிருக்கின்றது.
ஆகவே நான் இங்கிருந்து எழுப்புகின்ற குரல், இது போன்ற பொதுவான விஷயங்களிலே கூட, ஒருமித்தக் குரலாக இருக்க வேண்டும். எல்லோரும் ஓர் குரலில் ஒலிக்க வேண்டும். அப்படி ஒலித்தால் மத்திய அரசு நம்முடைய நியாயங்களை உணர்ந்து நம்முடைய உரிமைகளை வழங்க என்றைக்கும் தயாராக இருக்கும். மத்திய அரசை குறை கூற வேண்டுமென்பதற்காக சிறு சிறு பிரச்சினைகளை யெல்லாம் பூதாகாரமாக பெரிதுபடுத்தி - மத்திய அரசுக்கும், இந்த மாநில அரசுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்படாதா, கலகம் தோன்றாதா, நாம் இடையிலே புகுந்து ஏதாவது சூழ்ச்சி புரிய முடியாதா என்று எண்ணுகின்ற கட்சிகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
ஆனால் பொதுவாக ஒரு கருத்தை எல்லோரும் சேர்ந்து ஒரு இலட்சியத்தை நிறைவேற்ற பொதுவான ஒரு குறிக்கோளாக எடுத்துக் கொண்டு ஒற்றுமையோடு பாடுபட வேண்டும். அது கல்வித் துறையானாலும், மருத்துவத் துறை ஆனாலும், சட்டத் துறை ஆனாலும் எந்தத் துறை ஆனாலும் அதிலே நாம் நம்முடைய ஒருமித்த கருத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் தலைவர் கலைஞர்
காசுமீர் போன்ற மாநிலங்களின் நிலையை பார்த்தாவது மத்திய அரசு மாநிலங்களுக்கு அதிக உரிமைகளை கொடுத்து , அதிகாரப்பகிர்வு செய்து மாநில சுயாட்சிக்கு பங்கம் ஏற்படாதவாறும், பிராந்திய கட்சிகளை பலவீனப்படுத்தாமலும் ,தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டால் அது வலிமை மிக்க இந்தியா உருவாக பெரிதும் உதவிடும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment